நாடக உலகின் "முடிசூடா மன்னர்" எஸ்.ஜி.கிட்டப்பா

நாடக மேடையில் கே.பி.சுந்தராம்பாள் முன்னேறிக் கொண்டிருந்தபோது, தமிழ் நாடக உலகின் முடிசூடா மன்னராக விளங்கியவர், எஸ்.ஜி.கிட்டப்பா.

நெல்லை மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அந்தக் காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் சேர்ந்திருந்தது. அங்கு, கங்காதர அய்யர் _ மீனாட்சியம்மாள் தம்பதிகளின் மகனாக 1906_ம் ஆண்டு ஆகஸ்டு 26_ந்தேதி கிட்டப்பா பிறந்தார்.

அவருடைய இயற்பெயர் ராமகிருஷ்ணன். எல்லோரும் செல்லமாக "கிட்டப்பா", "கிட்டன்" என்று அழைப்பார்கள். அதில் கிட்டப்பா என்ற பெயர் நிலைத்து விட்டது.

கிட்டப்பாவுடன் பிறந்தவர்கள் 8 சகோதரர்கள். ஒரு சகோதரி. இவர்களில் காசி அய்யர், சுப்பையர், செல்லப்பா ஆகியோர், அந்த நாளில் பிரபலமாக விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் நிரந்தர நடிகர்களாக இருந்தார்கள்.

கிட்டப்பா தன் 6 வயதில் சகோதரர்களின் நாடகத்தைக் காணச் சென்றார். அப்போது அவர் மேடை ஏறி, கணீர் குரலில் பாடினார். தம்பியின் குரல் வளத்தைக் கண்ட சகோதரர்கள் அவரையும் நாடக நடிகராக்கினர்.

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு நாடகக்குழு, கிட்டப்பாவையும், அவர் சகோதரர்களையும் நாடகங்களில் நடிக்க அழைத்தது. 1916_ம் ஆண்டில் கிட்டப்பா தன் சகோதரர்களுடன் இலங்கை சென்று, நாடகங்களில் நடித்தார். அங்கு கிட்டப்பா பாடிய பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தன.

சென்னை திரும்பிய கிட்டப்பா சகோதரர்கள், "வள்ளி திருமணம்" உள்பட பல நாடகங்களை நடத்தினர். கிட்டப்பா புகழ் பரவியது.

அழகும், இனிய குரலும் கொண்ட கிட்டப்பாவுக்குப் பெண் கொடுக்க பலர் முன் வந்தனர். பெற்றோர், கிட்டம்மாள் என்ற பெண்ணைப் பார்த்து முடிவு செய்தனர்.

கிட்டப்பா _ கிட்டம்மாள் திருமணம் 24 ஜுன் 1923_ல் சென்னையில் நடந்தது. அப்போது கிட்டப்பாவுக்கு வயது 18. கிட்டப்பா தொடர்ந்து நாடகங்களில் நடித்தார். அவர் நடித்த "தசாவதாரம்" ஒரே ஆண்டில் 200 முறை மேடை ஏறியது.

இந்த சமயத்தில், கே.பி.சுந்தராம்பாள் இலங்கையில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

"கிட்டப்பாவையும், சுந்தராம்பாளையும் ஜோடியாக நடிக்க வைத்தால் நாடகங்கள் பிரமாதமாக அமையும். வசூலும் அமோகமாக இருக்கும்" என்று, நாடக அமைப்பாளர்கள் நினைத்தனர்.

இலங்கைக்கு வந்து நாடகங்களில் நடிக்கும்படி, கிட்டப்பா சகோதரர்களுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று, கிட்டப்பாவும், அவருடைய சகோதரர்களும் 1925 இறுதியில் இலங்கை சென்றனர்.

எஸ்.ஜி.கிட்டப்பாவும், கே.பி.சுந்தராம்பாளும் முதன் முதலாக இலங்கையில் "வள்ளி திருமணம்" நாடகத்தில் ஜோடியாக நடித்தனர். கிட்டப்பா வேலனாகவும், சுந்தராம்பாள் வள்ளியாகவும் நடித்தனர். இருவரும் போட்டி போட்டுப் பாடி, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றனர்.

தமிழ்நாட்டுக்குத் திரும்பிய பிறகும், கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் பல நாடகங்களில் இணைந்து நடித்தனர். அவர்கள் புகழ் திக்கெட்டும் பரவியது.

தமிழ்நாட்டிற்குத் திரும்பிய பிறகும் கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் ஜோடியாக நடித்தனர். "வள்ளித் திருமணம்", "கோவலன்", "ஞானசவுந்தரி" முதலிய நாடகங்கள் சக்கை போடு போட்டன. பேசும் படங்கள் வராத அந்தக் காலக் கட்டத்தில் கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் பாடிய நாடகப் பாடல்கள், இசைத்தட்டுகளாக வெளிவந்து மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தன.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails