எங்கே போய் முடியுமோ?

மக்களவைப் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சமீபகாலமாக எதிர்பாராத சிக்கல்களில் சிக்கித் தவிப்பதைப் பார்த்தால், எந்தவித முன்யோசனையோ, ராஜதந்திர அணுகுமுறையோ இல்லாமல், தூண்டிலில் சிக்கும் மீனாக இந்தியா மாட்டிக் கொள்கிறதோ என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. வெளிவிவகாரத்துறை அடுத்தடுத்து குளறுபடிகளைச் செய்வது கவலையைத் தருகிறது.

சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கென்று தனி மரியாதையை ஏற்படுத்தித் தந்தார் பண்டித ஜவாஹர்லால் நேரு. வளரும் நாடாகவே இருந்தாலும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்து என்ன என்று மேற்கத்திய நாடுகளாலும் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளாலும் அக்கறையுடன் கவனிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ஒரு அணியாகவும் சோவியத் யூனியன் தலைமையிலான சமதர்ம நாடுகள் மற்றொரு அணியாகவும் பிரிந்தபோது, இரு அணிகளையும் சாராத புதிய அணியை (அணி சாரா நாடுகள் அணி) ஏற்படுத்தி அதற்குத் தலைமையேற்கும் தகுதியை இந்தியாவுக்கு ஏற்படுத்தித் தந்தார் பண்டித நேரு.

நேருஜியின் இந்தப் பாரம்பரியத்தை லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி உள்ளிட்டோரும் காப்பாற்றி வந்தனர். இப்போது முதலாளித்துவ நாடுகள் வரிசையும் சோஷலிச நாடுகளின் வரிசையும் கலைந்துவிட்டதால் அணிசாரா நாடுகளின் வரிசைக்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. பயங்கரவாதிகளை ஊக்குவித்து எப்போதும் நமக்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதையே கடமையாகக் கருதிச் செயல்படும் பாகிஸ்தானுடன் சமாதானம் பேசினால்கூட ஆபத்தில்தான்போய் முடியும் என்றால் என்ன சொல்வது?

எகிப்தில் நடந்த இந்திய - பாகிஸ்தான் பிரதமர்களுக்கு இடையிலான சந்திப்புக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையை இந்திய அதிகாரிகள் சரியாகப் படித்துப்பார்க்காமல் ஒப்புதல் தந்தது எப்படி? இப்போது இதை ""வெறும் காகிதம்தான், சட்டபூர்வ ஆவணம் இல்லை'' என்கிறார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர். அவருடைய விளக்கத்தைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

பாகிஸ்தானில் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது, போலீஸ் அகாதெமி தாக்கப்பட்டது ஆகிய இரு சம்பவங்களின் பின்னணியிலும் இந்திய அரசுக்குப் பங்கு இருக்கிறது என்று இப்போது நாகூசாமல் கூற ஆரம்பித்திருக்கிறார்கள் பாகிஸ்தானியர்கள். போதாக்குறைக்கு பலுசிஸ்தானில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நடைபெறும் ஆயுதக் கலவரங்களின் பின்னணியிலும் இந்திய அரசின் உளவுத்துறை ("ரா') இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். கூட்டறிக்கையிலேயே, ""பலுசிஸ்தான் குறித்து இருதரப்பும் ஆழ்ந்து கவலைப்படுவதாக'' ஒரு வரியைச் சேர்த்திருக்கிறார்கள்! எத்தனை விஷமமான வார்த்தை இது? இதை எப்படி இந்திய அதிகாரிகள் அனுமதித்தார்கள்?

அமெரிக்க அரசுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்திய ராஜதந்திரத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று கூறி, சில மாதங்களுக்கு முன்னால் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பரித்தார்கள். உலகின் பிற நாடுகள் எல்லாம், ""இந்தியாவுக்கு மட்டும் சலுகையா?'' என்று பொறாமையுடன் கேட்பதாகக்கூட பெருமைப்பட்டுக்கொண்டார்கள். இப்போதோ அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் (என்.பி.டி.) கையெழுத்திட்டால் மட்டுமே அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகளில் இனி ஒத்துழைப்பு என்று அமெரிக்கர்கள் நம் கழுத்தில் சுருக்கு மாட்டிவிட்டார்கள்.

இந்தியாவுக்கு வந்தார் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன். இந்தியாவில் ஐந்து நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹிலாரி கிளின்டன் நமது வெளியுறவு அமைச்சருடன் செலவிட்டது வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே. அதுவும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி மட்டும்தான் பேசினார் என்று தெரிகிறது. ஜி - 8 மாநாடு அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்தால் மட்டுமே ஒத்துழைப்பு என்று கூறுகிறதே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு மழுப்பலாக ஒரு பதிலைத் தந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார் ஹிலாரி.

எதை எதையோ சொல்லி, நம்மை நம்ப வைத்து வகையாக மாட்டி விட்டார்கள். நீங்கள் வல்லரசாக மாறுவது இருக்கட்டும். முதலில் அணிசாராக் கொள்கையைக் கைவிட்டுவிட்டு எங்களுக்கு அடிமை சாசனம் எழுதித் தாருங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது அமெரிக்கா. நம்பி மோசம் போனோம் என்று ஒத்துக்கொள்ளவும் முடியாமல், தவறைத் திருத்தும் தைரியமும் இல்லாமல் தவிக்கிறோமே, இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லையே

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails