மைனா - விமர்சனம்

மைனா வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பே படுபயங்கர எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு, அதில் ஓரளவு பூர்த்தியும் செய்திருக்கிறது.

குடித்து குடித்து இறந்து போன அப்பாவால் சின்ன வயதிலேயே குடியிருக்கும் வீடு உள்ளிட்ட சொத்துபத்துகளையும், சொந்தபந்தங்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் நாயகிக்கும், அவரது அம்மாவிற்கும் அடைக்கலம் கொடுக்கிறான் சிறுவயது ஹீரோ.

பனியாரம் சுட்டு விற்று வயிற்றை கழுவும் நாயகியின் அம்மாவால் நன்றாக படித்தும், நாயகியை படிக்க வைக்க முடுியாத சூழல். அதனால் நாயகியை தானே கூலி வேலையெல்லாம் செய்து படிக்க வைக்கும் நாயகனுக்கு, இனம் புரியாத வயதில் இருந்தே நாயகி மீது காதல்! நாயகிக்கும் நாயகன் மீது அதே ரக காதல்!

இது நாயகியின் அம்மாவிற்கு தெரியவருகிறது.அதுவரை வாய்திறந்து ஹீரோவை மருமகனே.. மருமகனே... என அழைத்து வந்த அவர், அதன் பின் காட்டும் ஆக்ஷனும், ஆக்ரோஷமும், அதற்கு ஹீரோ பண்ணும் ரீயாக்ஷனும், அதனால் எழும் பிரச்னைகளும்தான் மைனா படத்தின் மீதிக்கதை!

க்ளைமாக்ஸில் சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் அந்த ஜோடிக்கு ஏற்படும் கொடூரம், படம் முடிந்து நீண்ட நேரமாகியும் நம் நெஞ்சை விட்டு நீங்க மறுப்பது படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும் ப்ளஸ் பாயிண்ட்.

மைனாவின் நாயகராக சுருளி எனும் பாத்திரத்தில் தொட்டுப்பார் விதார்த் நம் மனதை தொடுகிறார். காட்டான் மாதிரி தலைமுடியும், தாடி மீசையுமாக இருந்தாலும், ரசிகர்கள் நெஞ்சை உலுக்கும் நடிப்பில் ஜூனியர் ராஜ்கிரண் என்று பட்டமே தரலாம் இவருக்கு.

அதுவும் தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் பெற்ற தாய் - தந்தையையே அடிக்க பாயும் இடத்தில் விதார்த் சிறப்பான நடிப்பை விதைத்திருக்கிறார். அதேமாதிரி, விபத்துக்குள்ளான பேருந்தில் தன்னையும், தன் காதலையும் குழி தோண்டி புதைக்க நினைக்கும் சிறைக்காவலர்களை காப்பாற்றும் இடத்திலும் சபாஷ் வாங்கி விடுகிறார் விதார்த்.

மைனாவாகவே வாழ்ந்திருக்கும் அமலா பால், சிந்து சமவெளியில் விட்டதை இங்கே பிடித்து விட்டார். இவர் அழகான பெண்பால் மட்டுமல்ல... அருமையான நடிப்பாலும் நம்டம தன்வசப்படுத்தி விடுகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கு நிகழும் கொடூரம் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும்.

விதார்த் - அமலா பால் மாதிரியே ஜெயிலர் பாஸ்கராக வரும் சேது, தம்பி ராமையா, செவ்வாளை, கார்த்திக், பூவிதா, மீனாட்சி உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாய் செய்திருக்கிறார்கள். அதிலும் மைனாவின் சாவிற்கு காரணமான தன் மனைவி உள்ளிட்ட சொந்தபந்தங்களை போட்டுத் தள்ளும் ஜெயிலர் பாஸ்கராக வரும் சேதுவும், சுருளியின் அன்பில் உருகிப் போகும் தம்பிராமையாவும் பிரமாதம்.

சுகுமாரின் ஒளிப்பதிவும், டி.இமானின் இசையும் இதுவரை காணாத தமிழ்சினிமாவை கண் முன் நிறுத்துகிறது. இதுதான் க்ளைமாக்ஸோ, அதுதான் க்ளைமாக்ஸா இருக்குமோ... என எக்கச்சக்கமாக யோசிக்க விட்டு, யாருமே யோசிக்காத கோணத்தில் மைனாவுக்கும், சுருளிக்கும் முடிவு கட்டும் க்ளைமாக்ஸில் டைரக்டர் பிரபு சாலமன் வித்தியாசமாகத் தெரிகிறார்.

மைனா - தரமான தமிழ்ப்படம்தான் நைனா!

1 comments:

Thiruvattar Sindhukumar said...

மைனா ..ரொம்ப நாளுக்கப்புறம் மனதைக்கொள்ளை கொண்ட அருமையான படம். காட்சிகள் இயல்பு. மூணாறு, தேனி, குரங்கணி ஏரியாக்களில் ஒருமுறை பயணிக்கவேண்டும் என்ற ஆசை படம் பார்க்கையில் வருகிறது. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை இதற்கு முன் டைரக்டர் அகத்தியன் பெற்றிருந்தார். இம்முறை திரைக்கதை + டைரக்‌ஷனுக்கான விருதைப்பெறப்போகிறார் பிரபுசாலமன்.
கிளைமாக்ஸ் கண்களில் நீர்தழும்பியது.

-திருவட்டாறு சிந்துகுமார்

Post a Comment

Related Posts with Thumbnails