கிரெடிட் கார்டை பயன்படுத்த அடையாள அட்டை அவசியம்

பொருள்கள் வாங்கி விட்டு அதற்கான பணத்தை கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் செலுத்துவதற்கு புகைப்படத்துடன் அடையாள அட்டை அவசியம் என வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.

நாடு முழுவதும் 5 கோடி கிரெடிட் கார்டுகளும், 30 கோடி டெபிட் கார்டுகளும் புழக்கத்தில் உள்ளன. கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2 ஆயிரம் மோசடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், பொருள்கள் வாங்கும் வர்த்தக நிறுவனங்களில் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற புகைப்படத்துடன் அடையாள அட்டை கேட்கப்படலாம் என தனது வாடிக்கையாளர்களுக்கு ஐசிஐசிஐ வங்கி அறிவுறுத்தியுள்ளது.

கிரெடிட் கார்டு மோசடி பிரச்னை மக்களவையிலும் பிப்ரவரியில் எதிரொலித்தது. 2008 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 8 ஆயிரம் சம்பவம் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது என மத்திய ரிசர்வ் வங்கிக்கு ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

எச்எஸ்பிசி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், சிட்டி வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, டாயிஷ் வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் மூலமும் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது என மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இம் மோசடியைத் தடுக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கோருதல், கார்டு தொலைந்தால் பணம் எடுப்பதைத் தடுக்க உடனடி நடவடிக்கை உள்பட பல ஆலோசனைகளை வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails